Designed by Iniyas LTD
தமிழ் மக்களின் உடனடி தேவைகளை இரகசியமாக பேச வேண்டிய தேவை என்ன – சுரேஸ் பிரேமச்சந்திரன்
வடகிழக்கு தமிழ் மக்களின் உடனடித்தேவைகள் மற்றும் தேர்தல் நிலமைகள் குறித்து உள்நாட்டுக்குள் ஒரு பேச்சுக்களை நடத்தாமல் வெளிநாட்டில் அதுவும் இரகசியமான முறையில் ஒரு பேச்சு எதற்காக என சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், மற்றும் புலம்பெயர் தமிழர்கள், வெளிநாடுகளின் பிரதிநிதிகள், இணைந்து இங்கிலாந்து நாட்டில் நடத்திவரும் இரகசிய பேச்சு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
இதற்கு முன்னர் சிங்கப்பூர் நாட்டில் ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதுவும் இரகசியமான முறையில் நடத்தப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது? எதற்காக அந்தக் கூட்டம் நடைபெற்றது என்பது தொடர்பாக வெளிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் இரண்டாவது தடவையாக இங்கிலாந்து நாட்டில் ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது.
இந்தப் பேச்சுவார்த்தை இரகசியமான முறையில், நடைபெறுவதாகவும் இதில் தமிழ் மக்களின் உடனடி தேவைகள் மற்றும் தேர்தல் நிலமைகள் தொடர்பாகவும் பேசப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்தக் கூட்டம் இரகசியமான முறையில் நடைபெறுவதாகவும் சொல்லப்படுகின்றது. நாங்கள் கேட்கின்றோம். தமிழ் மக்களின் உடனடி தேவைகள் தொடர்பாக பேசுவதானால் அது தொடர்பாக வடகிழக்கு மாகாண சபையுடன் பேச்சு நடத்தப்படவேண்டும். ஆனால் மாகாணசபையினர் எவரும் இந்தக் கூட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
மேலும் தமிழ் மக்களின் உடனடி தேவைகள் என்ன? என்பது அனைவருக்கும் தெரியும். ஆதனை இரகசியமான முறையில் பேசவேண்டிய தேவை என்ன? மேலும் தேர்தல் தொடர்பாக உள்நாட்டில் பேசவேண்டுமே தவிர வெளிநாட்டில் பேசவேண்டிய தேவை என்ன? எனவே இந்த இரகசிய பேச்சுவார்த்தையில் மறைமுக நிகழ்ச்சி நிரல்கள் உள்ளதாகவே நாங்கள் கருதவேண்டியிருக்கின்றது. ஊடகங்களிலும் மாறுபட்ட விடயங்கள் தொ டர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன.
எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை இங்கே என்ன நடக்கின்றது என்பது தொடர்பாக வெளிப்படுத்தவேண்டும். காரணம் இந்தப் பேச்சுவார்த்தையில் தென்னாபிரிக்கா, சுவிஸ், நோர்வே நாடுகளின் பிரதிநிதிகளும், புலம்பெயர் தமிழர்களும், இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருப்பதாக அறியக்கிடைக்கின்றது.
எனவே இந்த இரகசிய பேச்சுவார்த்தை சர்வதேச விசாரணையிலிருந்து முன்னைய ஆட்சியாளர்களையும், படையினரையும் காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஒரு பாகமாக நடைபெறுகின்றதா? என்ற கேள்வியை எம்மிடம் பலர் எழுப்பியிருக்கின்றார்கள். எனவே அந்த அர்த்தத்திலேயே நாம் எடுத்துக் கொள்ளவேண்டிய நிலை வரும் எனவும் அவர் கேட்டுள்ளார்.