Designed by Iniyas LTD
நாட்டின் செல்வவளத்தையும் மனித ஆற்றலையும் பலியாக்கியுள்ளது மத்திய பட்ஜெட்: முத்தரசன்
அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கூறியுள்ளார்.
பட்ஜெட் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
பொதுத்துறை பங்குகள் விற்கப்படுதல், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்குதல் தொடர்கிறது. பாதுகாப்புத்துறையில் அன்னிய மூதலீட்டை அதிகரிப்பது நாட்டின் பாதுகாப்புக்கு பேராபத்தானது. அரசு மற்றும் தனியார் கூட்டுத்திட்டம் மூலம் (பிபிபி) கிடைக்கும் முதலீடுகளை சார்ந்திருத்தல் தற்சார்பு பொருளாதாரத்தை முற்றிலுமாக தகர்த்து விடும்.
பணமதிப்பு குறைந்து வரும் நிலையில் வருமானவரி விதிப்பிற்கான வருமான அளவு உயர்த்தப்படும் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். பெருந்தொழில் நிறுவனங்களுக்கு சலுகை அளிப்பது தொடர்கிறது. கம்பெனி சட்டம் திருத்தப்படுவதன் மூலம் என்னபலன் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
விளைநில பரப்பளவு குறைந்து வருவதும், விளை நிலங்கள் பண்ணை சாராப் பணிகளுக்கு மாற்றப்படுவதும், குறிப்பாக ‘ரியல் எஸ்டேட்’ வியாபாரம் பெருகி வருவதும் உணவு தானிய உற்பத்தியை சீர்குலைத்து உணவு பாதுகாப்பு வளையத்தை உடைத்து நொறுக்கிவிடும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் இலக்கில் 90 சதவீதம் பண்ணை சார்பு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடன் தொல்லையிலிருந்து விடுபடவில்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொடர்ந்து வரி குறைக்கப்படுகின்றன. சாதாரண மக்கள் தலையில் சுமையேற்றும் மறைமுக வரிகள் உயர்த்தப்பகின்றன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், கிராம வளர்ச்சி, பாசனம் மற்றும் இயற்கை வேளாண்மைக்காக ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதல்ல. வேளாண் விளை பொருட்களையும், விவசாயத்தையும் “ஆன்லைன்” வியாபாரத்திற்கு தள்ளிவிடுவது வேளாண்மை பொருளாதாரத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமைப்படுத்தி விடும். உயர் மருத்துவ சிகிச்சைகளுக்கு கார்ப்பரேட் மருத்துவமனைகளை நம்பியிருக்க நிர்பந்திக்கிறது.
மத்திய அரசின் 2016-17 ஆண்டு பட்ஜெட் நாட்டின் முன்னேற்றத்திற்கும் மக்கள் நலனுக்கும் ஆதரவளிக்கவில்லை. பெருந் தொழில் நிறுவனங்களின் லாப வேட்டைக்கு நாட்டின் செல்வவளத்தையும் மனித ஆற்றலையும் பலியாக்கியுள்ளது மத்திய பட்ஜெட். என்றார் முத்தரசன்.