Designed by Iniyas LTD
புதிய கட்சி இல்லை – முக அழகிரி
கலைஞரையும், தி.மு.க. வையும் காப்பதே என் லட்சியம், தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை என்று ஆதரவாளர்கள் கூட்டத்தில் மு.க.அழகிரி எம்.பி. அறிவித்தார்.
தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டம் மதுரை சத்தியசாய்நகரில் உள்ள தயாமகாலில் நேற்று நடந்தது. காலை முதலே ஏராளமான ஆதரவாளர்கள் அங்கு குவியத் தொடங்கினர். அங்கு வந்திருந்தவர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மு.க.அழகிரி காலை 10.45 மணிக்கு அங்கு வந்தார். பின்னர் மு.க.அழகிரி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இப்போது மட்டுமல்ல, என்றும் நீங்கள் எனக்கு ஆதரவாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. முதலில் போஸ்டர் அடிப்பதை நிறுத்த வேண்டும். அப்படி அடித்தது தான் இந்த நிலைக்கு நம்மை கொண்டு வந்து விட்டுள்ளது. கலைஞரை எதிர்த்தே சில இடங்களில் போஸ்டர் அடிக்கிறார்கள். அதெல்லாம் தவறு இல்லையாம். ஆனால் எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் அடிப்பது தவறாக தெரிகிறது.
என் ஆதரவாளர்களை நீக்கினார்கள். ஏன் என்று கலைஞரிடம் கேட்டேன். அதற்கு என்னையும் சஸ்பெண்டு செய்தார்கள். நான் என்ன தவறு செய்தேன்?
நிருபர்கள் என்னிடம், கட்சித்தலைமையிடம் நீங்கள் மன்னிப்பு கேட்பீர்களா என்று கேட்டார்கள். நான் என்ன தவறு செய்தேன். மன்னிப்பு கேட்பதற்கு. நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் சொன்னால் நான் மன்னிப்பு கேட்க தயார் (கூட்டத்தினர் மன்னிப்பு கேட்க வேண்டாம் என கோஷம் போட்டனர்). அப்பா-கட்சித் தலைவர் என்ற முறையில் கலைஞரிடம் ஏராளமான முறை மன்னிப்பு கேட்டுள்ளேன். ஆனால் எந்த தவறும் செய்யாமல் தற்போது எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
இன்றைய கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப் போவதாக எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை. “கலைஞர் தி.மு.க.” என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப் போவதாக போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள். அப்படி ஒரு திட்டம் இல்லை.
தி.மு.க. என்றாலே கலைஞர் தான். கலைஞரையும், தி.மு.க.வையும் காக்க வேண்டியது நமது லட்சியம். எனவே முடிவை நான் சொல்ல வேண்டியது இல்லை. உங்களை சந்தித்து கருத்து கேட்பது போல், தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்களை கேட்டுத்தான் எந்த முடிவையும் அறிவிப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ரித்திஷ் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்சா, முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் எம்.எல்.ராஜ், உதயக்குமார், இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் மு.க.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
கட்சிக்கு உழைத்தவர்களுக்கு சீட் தராமல், வேண்டியவர்களுக்கு எல்லம் சீட் தந்திருக்கிறார்கள். எனக்கு கூட வேண்டியவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் சீட் வாங்கி தந்ததில்லை. வேலூரில் கூட்டணி கட்சி வேட்பாளருக்கு சீட் தரப்பட்டு உள்ளது. அங்கு துரைமுருகன் மகனுக்கு சீட் தரவில்லை என்று அந்த வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து அனைத்து பத்திரிகைகளிலும் செய்தி வந்துள்ளது. ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை.
ஜெயலலிதாவை ஒரு விஷயத்திற்காக நான் பாராட்டுகிறேன். அந்த கட்சியில் ஆண்டுக்கு ஒரு மாவட்ட செயலாளர் வந்து விடுகிறார். தி.மு.க. அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில் மாற்றம் வரும் என்று கலைஞர் அறிவித்து இருக்கிறார். அவர் கூறியது போல், 35 வேட்பாளர்களையும் மாற்றினால் தான் தி.மு.க. வெற்றி பெற முடியும்.
இவ்வாறு அழகிரி கூறினார்.