Designed by Iniyas LTD
மலிங்கவின் கருத்தால் உடன் நாடு திரும்ப உத்தரவு!
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க எக்காரணம் கொண்டும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடமுடியாது என்றும் அவரை உடனடியாக நாட்டுக்குத் திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.
காயம் காரணமாக ஆசியக் கிண்ணம் மற்றும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர்களிலிருந்து விலகியிருந்த லசித் மலிங்க, தனது உடற்தகுதியை இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் வைத்தியர்களிடம் நிரூபித்த பின்னர் அவர்களினால் விடுக்கப்படும் அறிவித்தலுக்குப் பின்னரே அவர் ஐ.பி.எல். தொடர்களில் கலந்துகொள்ள முடியும் என்று இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால அண்மையில் தெரிவித்திருந்தார்.
எமது அனுமதியில்லாமல் எவ்வித போட்டிகளிலும் அவர் கலந்துகொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள லசித் மலிங்க இந்தியா புறப்பட்டு சென்றுள்ளார். இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளர் மொஹான் டி சில்வாவிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது,
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் அவரை வலுகட்டாயமாக அணியில் இணைத்ததாக லசித் மலிங்க ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அது குறித்து ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அப்போது அவர் தனது காயத்திற்கு ஆயுர்வேத மருத்துவம் செய்துவருவதாகவும் உடனடியாக அவரால் விளக்கமளிக்க வர முடியாது என்றும் 3 வாரங்கள் கழித்து வந்து விளக்கமளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் திடீரென எமக்கு அறிவிக்காமல் இந்தியா சென்றுள்ளார்.
அதனால் அவர் உடனடியாக நாட்டுக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். விசாரணைகளில் பங்குகொள்வதாகவும் அவரும் இணக்கம் தெரிவித்துள்ளார்.
அப்படியானால் ஐ.பி.எல். தொடரில் லசித் மலிங்க விளையாடுவாரா என்று கேட்டதற்கு, இல்லை முடியாது. இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் அனுமதியில்லாமல் அவர் எந்தப் போட்டியிலும் விளையாடமுடியாது.
அவரின் உடற்தகுதியை நாம் ஆராய்ந்த பின்னரே அவருக்கான அனுமதியை வழங்குவோம் என்றும் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா மேலும் குறிப்பிட்டார்.