தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாவீரர்களுடைய தினம் எப்போதும் மக்கள் மனங்களில் நீங்காத இடம்பிடித்துள்ளது – அனந்தி சசிதரன்

உன்னத இலட்சியத்திற்காக தமது உயிரை அர்ப்பணித்த உத்தமர்களின் நினைவுகளை தமிழ் மக்களது மனங்களில் இருந்து அழித்துவிட ஒட்டுமொத்த இலங்கையே அணி திரண்டு வந்தாலும் முடியாத காரியம் என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். எமது இன விடுதலைப் போராட்டத்திற்காக தங்களுடைய உயரிய உயிரையே அர்ப்பணித்த மாவீரர்களுடைய தினம் எப்போதும் மக்கள் மனங்களில் நீங்காத இடம்பிடித்துள்ளது. அவர்களது மன உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் ஒருபோதும் முடியாது.Ananthy Sasitharan lead

அன்று தொட்டு இன்றும் உணர்வு பூர்வமாக அனைத்து தமிழ் மக்களும் கொள்கை வேறுபாடு இன்றி புனிதமான மாவீரர் தினத்தை கடைப்பிடித்து வருகின்றார்கள். இந்தநிலையில் ஒட்டுமொத்த இலங்கையும் அணி திரண்டு தமிழ் மக்களது மன உணர்வுகளை கட்டுப்படுத்த முயன்றாலும் அது முடியாத காரியம். ஏனெனில் உன்னத இலட்சியத்திற்காக தங்களுடைய உயிரை அர்ப்பணித்த உத்தமர்கள் இவர்கள். இவர்களுடைய தியாகம் போற்றப்பட வேண்டியது. அத்துடன் காலம் காலமாக தமிழர்களுடைய சரித்திரத்தில் மாவீரர் தியாகங்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படுவதுடன் எல்லாத்தமிழர் மனங்களிலும் அவர்கள் நீங்காத இடம்பிடித்திருப்பர். இந்த புனிதமான நாளை அனைத்து தமிழ் உறவுகளுடனும் சேர்ந்து நானும் அனுஷ்டிக்கின்றேன்.

கார்த்திகை 27 மாவீரர் நாள் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படுவது வழக்கம். எனினும் இராணுவம் குடாநாட்டை 1996 ஆம் ஆண்டில் முற்றுகையிட்டதில் இருந்து சமாதான காலம் வரை யாழ்ப்பாணத்தில் மாவீரர் தினம் பகிரங்கமாக அனுஷ்டிக்கப்படவில்லை. துயிலும் இல்லங்கள் இடித்தழிக்கப்பட்டு பற்றைக்காடாக காட்சியளித்தன. சமாதான காலத்தில் இருந்து மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கப்படும் வரை யாழ்ப்பாணத்தில் மீண்டும் இராணுவம், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் பார்த்திருக்க ஈகைச்சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இறுதிக்கட்ட யுத்தம் 2009ம் ஆண்டு முடிவுக்கு வரும் வரை வன்னிப் பெருநிலப்பரப்பில் பெருமெடுப்பில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. இன்று இறந்தவர்களை நினைவு கூருவதற்கு கூட பொதுவான நினைவாலயம் என ஒன்றில்லை. பொது இடங்களில் சுடர் ஏற்ற தடை. மீறி செய்பவர்கள் கைது செய்யப்படுவர். இராணுவக் குவிப்பு, புலனாய்வாளர்களது நடமாட்டம் மற்றும் எச்சரிக்கைப் பிரசுரங்கள் என்பனவற்றை அரசு திட்டமிட்டு செய்து வருகின்றது. இந்த நிலையிலும் ஏதோ ஒரு வழியில் ஒவ்வொருவரும் மாவீரர் நாளை அனுஷ்டிப்பர் என்பது தான் உண்மை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...