Designed by Iniyas LTD
வடகொரியாவில் திருடியவருக்கு பொது இடத்தில் மரணதண்டனை!
வடகொரியாவில் கிம் ஜாங் அன் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு தனி மனித உரிமைகள் மீறப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே எழுந்து வருகிறது.
இந்த நிலையில், அங்கு தொழிற்சாலைகளில் இருந்து தாமிர வயர்களை திருடி விற்கிறவர்களுக்கு, தென் கொரியாவில் தயாராகிற பத்திரிகைகளை விற்பனை செய்கிறவர்களுக்கு, ஆற்றங்கரைகளிலும், பள்ளிக்கூட மைதானங்களிலும் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்று மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக தெரியவந்துள்ளது.
இது குறித்த தகவல்களை டி.ஜே.டபிள்யு.ஜி. என்று அழைக்கப்படுகிற இடைநிலை நீதி பணிக்குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு தென்கொரிய தலைநகர் சியோலை சேர்ந்த தன்னார்வ தொண்டு அமைப்பு ஆகும். இந்த அமைப்பில் மனித உரிமை ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். லீ யெங்வான் என்பவர் தலைவராக உள்ளார். இவர் வடகொரியாவில் மனித உரிமைகளுக்காக வாதாடியவர் ஆவார்.
கடந்த 2 ஆண்டுகளில் வடகொரியாவில் இருந்து தென்கொரியாவுக்கு தப்பி வந்த 375 பேரை பேட்டி கண்டு இந்த அறிக்கையில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
ஆனால் மனித உரிமைகள் மீறப்படுவதாக கூறப்படுவதை வடகொரியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. தனது குடிமக்கள் அரசியல் சாசனத்தின் பாதுகாப்பின்கீழ் மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்தி வருவதாகவும், உலகிலேயே மனித உரிமையை மிக மோசமான அளவில் மீறுவது அமெரிக்காதான் எனவும் கூறி உள்ளது.