Designed by Iniyas LTD
உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உணர்வெழிச்சியுடன் நினைவுகூரப்பட்ட இனவழிப்பு நினைவு நாள்…
எம் நெஞ்சைவிட்டகலா முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாவது ஆண்டு நினைவேந்தலை நாம் பல நாடுகளிலிருந்தும் நேற்று அனுஷ்டித்தோம்.



அந்தவகையில் நேற்றுமாலை மாலை 7.00மணிக்கு நாலாவது தடவையாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உணர்வெழிச்சியுடன் இனவழிப்பு நினைவு நாள் இடம்பெற்றது.
நிகழ்வு திரு சுபாஷ் தலமையில் ஆரம்பிக்கப்பட்டு , பொது சுடரினை நாட்டுப்பற்றாளர் பொன் வினாயகமூர்த்தி அவர்களின் துணைவியாரும் மற்றும் இம் மாதத்தில் வீரச்சாவடைந்த மாவீரர் வித்தகனின் தாயாருமான திருமதி தையல்நாயகியும் இனவழிப்பின் கோரத்தினை உலகத்திற்கு உணர்த்த தன்னை ஆகுதியாக்கிய ஈகை பேரொளி முருகதாஸ் அவர்களின் தாயாரான திருமதி வர்ணகுலசிங்கம் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து பிரித்தானியாவின் தேசிய கொடியினை இளையோர் சார்பாக செல்வி கௌதமி நிரூபன் ஏற்றினார்.
அதனை தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை போராளிகள் சார்பாக திரு ஏற்றினார்.
தொடர்ந்து வீரகாவியமான மாவீர்களையும் போரின் போது கொல்லப்பட்ட மக்களையும் குறிப்பாக இனவழிப்பின் அடையாளமாக முள்ளிவாய்க்காலில் தங்களின் இன் உயிர்களை தியாகம் செய்த உறவுகள் அனைவரையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.



இனவழிப்புக்கான நீதி கோரி இளையோரின் அறைகூவலினை செல்வி புகழினி பாலகிருஷ்ணன் விடுத்தார்.
அதனை தொடர்ந்து பிரதான சுடரினை திருமதி கவிகுயில் ஏற்ற உறவுகள் அனைவரும் தங்கள் உறவுகளை நெஞ்சிருத்தி ஈகை சுடர்களை ஏற்றி முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மலர் வணக்கம் செய்தமை குறிப்பிடத்தக்கது.