Designed by Iniyas LTD
ரஷ்யா விமான விபத்தில் 92 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்
சிரியாவுக்கு புறப்பட்டு சென்ற ரஷிய ராணுவ விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. அதில் விமானத்தில் பயணம் செய்த 92 பேரும் பலியாகினர். விமானத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷிய படைகளும் களமிறங்கி, கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு வருகின்றன. சிரியாவில் ஹமெய்மிம் ராணுவ தளத்தில் முகாமிட்டு, கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு வருகிற ரஷிய படையினரின் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இசை நிகழ்ச்சி நடத்த ரஷியா முடிவு செய்தது. இதற்காக இசைக்குழுவினர் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்பட 92 பேருடன் ரஷியாவின் டி.யு-154 ராணுவ விமானம் சோச்சியில் இருந்து புறப்பட்டு சென்றது. சிரியாவின் லட்டாகியா நகரை நோக்கி சென்ற விமானத்தில் பயணிகள் 84 பேர், சிப்பந்திகள் 8 பேர் என மொத்தம் 92 பேர் பயணம் செய்தனர்.
விமானம் சோச்சியில் இருந்து புறப்பட்டு சென்ற 20 நிமிடத்தில் ரேடார் திரையில் இருந்து மறைந்தது. அதைத் தொடர்ந்து அந்த விமானத்தை தேடும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. அதில் அந்த விமானம், கருங்கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் பயணிகள், சிப்பந்திகள் என 92 பேரும் பலியாகி இருக்க வேண்டும், யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் ரஷ்யா விமானத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
ரஷ்யா விமானத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தருணத்தில் ரஷ்யா துக்கத்தில் இந்தியாவும் பங்கேற்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.