Designed by Iniyas LTD
அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – ஓ. பன்னீர்
அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 470 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். 
ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்காக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் 18 ஆயிரத்து 503 கோடியே 80 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழக அரசு உலக மூதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதாக குறிப்பிட்ட பன்னீர்செல்வம், இடைக்கால நிதிநிலை அறிக்கையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு 348 கோடியே 13 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்காக 78 கோடியே 46 லட்ச ரூபாய் ஒதுக்கப்படும் என்றும், கூட்டுறவு நூற்பாலைகள் 147 கோடியே 21 லட்ச ரூபாயில் நவீனப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். நாமக்கல், ஈரோடு, சேலம், கரூரில் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.