கேரள மக்களைக் கிண்டல் செய்து சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்த ஊழியரை தனியார் நிறுவனம் ஒன்று உடனடியாக வேலையைவிட்டு நீக்கியுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த யூசுப் அலி. ஏமனில் மிகப்பெரிய தொழிலதிபராக லூலு குரூப் இன்டர்நேஷனல் எனும் நிறுவனத்தை நடத்திவருகின்றார்.
கேரளாவில் கொச்சி, எர்ணாகுளம், திருவனந்தபுரத்தில் இவரின் நிறுவனத்தின் கிளைகள் உள்ளன.
மழைவெள்ளத்தால் கேரள மாநிலம் பாதிக்கப்பட்ட நிலையில், லூலு குழுமத்தின் தலைவர் யூசுப் அலி, ரூ.12 கோடி நிதியுதவியை வழகியுள்ளார்.
இந்நிலையில், ஓமன் நாட்டில் லூலு குழுமத்தின் நிறுவனத்தின் ஊழியரான ராகுல் செரு என்பவர் கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் மக்கள் சிக்கி இருப்பதைப் பார்த்து புகைப்படம் வெளியிட்டு பேஸ்புக்கில் கிண்டலாகக் கருத்துக்களை வெளியிட்டு இருந்தார்.
அவரின் இந்தக் கருத்துக்கு ஏராளமான மக்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்தச் சூழலில் ராகுலின் பொறுப்பற்ற செயலைக் கண்டித்த லூலு குழும நிறுவனம் அவரை உடனடியாக பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.