தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருமலை படுகட்டில் தமிழர் நிலத்தில் சிங்களப் பிக்கு அட்டகாசம்!

trincomap

திருகோணமலை படுகட்டு பிரதேசத்தில் நிலவிய கடுமையான பதட்டம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகள் உறுதிப்படுத்தி உள்ளது.

பிரதேசத்தின் அகத்தியர் சிவன் கோவில் ஸ்தாபனத்திற்கு சொந்தமான 20 ஏக்கர் காணி மற்றும் தமிழ் மக்களின் 300 ஏக்கர் காணிகளை, தொடர்ந்தும் தெகிவத்தை விகாரபதி குழுவினர், தமது கட்டுப்பாட்டுள் வைத்திருக்க எடுத்த முயற்சியினால் அப்பகுதியில் கடுமையான பதட்டம் நிலவியதாக அங்கிருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளரைத் தொடர்பு கொண்ட பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

யுத்தம் முடிவுக்கு வந்த 2009 மே அடுத்த நாள், படுவன் காடு பிரதேசத்திற்கு சென்ற தெகிவத்தை விகாரபதி குழுவினர் அத்து மீறி காணிகளை கைப்பற்றினர். இந்தப் பிரதேசம் திருமலையின் எல்லைக் கிராமமாக காணப்படுகிறது. இங்கு வசிக்கும் பெரும்பான்மையான சிங்கள குடும்பங்கள் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருப்பதோடு, அவர்கள் மீண்டும் வயல்பிரதேசங்களில் பயிாிடுவதற்கும் தமது ஆதரவை வெளியிட்டு உள்ளனர்.

எனினும் இந்த எல்லைப்பகுதியில் வாழும், தெகிவத்தை விகாரபதி தலைமையிலான 15 குடும்பங்கள் மட்டுமே தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை மீளப் பெறுவதற்கு தடையாக இருப்பதுடன் வன்முறைகளில் ஈடுபடவும் தயாராக இருப்பதாக பிரதேச தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமது பூர்விக காணிகளுக்கு தம்மிடம் சட்டபூர்வமான உறுதிகள் இருந்தும், இது குறித்து இதுவரை தாங்கள் யார் யாரிடம் எல்லாம் போய் நீதி கேட்க முடியுமோ அவர்களிடம் எல்லாம் சென்றும் எதுவித பயனும் கிடைக்கவில்லை என கவலை வெளியிட்டுள்ளனர்.

இறுதியாக மார்ச் 25ல் படுகட்டு பிரதேச காணிகளின் உரிமையாளர்கள் எல்லோரும் சேர்ந்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியும் அதற்கு இதுவரை பதில் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கும் மக்கள், 3 நாட்களுக்கு முன் தமது காணிகளுக்கு போய், வேளாண்மையை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்து, விவசாய முயற்சிகளை தொடங்கியதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று பிரதேசத்திற்கு, கத்தி கோடரி போன்ற ஆயுதங்களுடன் சென்ற தெகிவத்தை விகாரபதி குழுவினர், கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்பினருக்கும் பயங்கரமான முறுகல் நிலை ஏற்பட்ட நிலையில், ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசாரும் அரசியல் பிரமுகர்களும் இருதரப்பினரையும் சமாதானப் படுத்தி, 4 நாட்களுக்குள் முடிவு சொல்வதாக உத்தரவாதம் அளித்துள்ளதாக பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமது பூர்விக காணிகள் விடயத்தில் தாம் இனியும் பொறுமை காக்க முடியாது எனத் தெரிவித்துள்ள மக்கள் 4 நாட்களின் பின் தீர்வு கிடைக்காவிடின், தமது காணிகளில் வயல் செய்வது திண்ணம் என்றும், வரும் விளைவுகளை எதிர்கொள்ளத் தயார் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை யுத்தகாலத்தில் கைவிடப்பட்ட அகத்தியர் சிவன் ஆலயத்தில் கடந்த 11ம் திகதி கும்பாவிசேகம் மற்றும் மண்டலாபிசேகம் செய்து மீண்டும் ஆலய தரிசனத்தை ஆரம்பித்து உள்ளதாகவும், இனி கோவிலையும் விடுவதற்கு தயார் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...