Designed by Iniyas LTD
புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளமைக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்
யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் பெருமளவு படையினர் நிறுத்தப்பட்டுள்ளமை மற்றும் புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளமைக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. பொறுப்பு வாய்ந்தவர்கள் மாணவர்களின் சுமூகமாக கற்றல் செயற்பாடுகளுக்கு உதவுமாறும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. மேற்படி விடயம் தொடர்பில் ஒன்றியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த சில தினங்களாக பல்கலைக்கழகத்தை சுற்றி அதிகளவு படையினரும், புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகின்றது. அதனால் பல்கலைக்கழக மாணவர் சமூகம் அச்சத்திற்குள்ளாகியிருக்கின்றது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் விரிவுரைகள் அனைத்தும் தொடர்ந்து நடைபெறும் என பீட நிர்வாகங்கள் அறிவித்துள்ள நிலையிலும் பெருமளவு மாணவர்கள் கடந்த சில தினங்களாக விரிவுரைகளுக்கு சமூகமளிக் கவில்லை.
அதேவேளை விடுதியில் தங்கியிருந்த மாணவர்களும் கடந்த காலத்தில் ஏற்பட்ட அசம்பாவிதங்களை கருத்தில் கொண்டு தற்போதைய அசாதாரண சூழ்நிலைகளினால் அச்சம் காரணமாகவும் விடுதிகளை விட்டு வெளியேறியிருக்கின்றனர். போர் நடைபெற்ற காலங்களில் எமது மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலேயே கற்றல் நடவடிக்கையினை தொடர்ந்து வந்தனர். தற்போது போர் முடிவுற்று சமாதானம் நிலவுவதாக கூறப்பட்டாலும் தற்போதைய சூழ்நிலையினை பார்க்கும்போது போர்க்காலத்தில் ஏற்பட்ட சூழ்நிலையினையே மாணவர்கள்,உணர்கின்றனர்.
இது மாணவர் மத்தியில் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதே காலப்பகுதியில் ஏனைய பல்கலைக்கழகங்களில் சுமூகமான நிலை காணப்படுகின்ற போதிலும் எமது பல்கலைக்கழகத்தில் மட்டும் இவ்வாறான அசாதாரண நிலை காணப்படுவது மாணவர்களது இயல்பா ன கற்றல் நடவடிக்கைகளுக்கு இடையூறாக உள்ளது.மேலும் மாணவர்கள் பல்வேறு கஸ்டங்களுக்கும் இன்னல்களுக்கும் மத்தியிலேயே தமது கல்வி நடவடிக்கையினை தொடர்கின்றனர்.
இவ்வாறான சூழ்நிலைகளினால் மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகி இருக்கின்றனர். ஆகவே சம்மந்தப்பட்ட தரப்புக்கள் இதனை கருத்தில் கொண்டு எமது மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கும் பல்கலைக்கழ சுமூகமான நடவடிக்கைகளுக்கும் ஆவன செய்யுமாறும் அதேவேளை, இவ்வாறானதொரு சூழ் நிலை இனிவரும் காலங்களில் இடம்பெறாத வகையில் கருத்திற் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என்றுள்ளது.
இதற்கிடையே யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவு மற்றும் விஞ்ஞான பிரிவுகளுக்கு எதிர்வரும் 1ம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் இரவோடு இரவாக அறிவித்தல் விட்டிருக்கும் நிலையில், மாணவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதுடன் விடுமுறை எதற்காக எனவும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
நேற்றிரவு பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவு மற்றும் விஞ்ஞான பிரிவுகளுக்கு எதிர்வரும் 1ம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. எனினும் குறித்த விடுமுறை எதற்காக என்பதை அவர்கள் தெரிவிக்க மறுத்துள்ளனர். விடுதிகளில் உள்ள மாணவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதுடன், அவர்களை விடுதிகளை விட்டு வெளியேறுமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.