Designed by Iniyas LTD
விமான நிலையம், துறைமுக அபிவிருத்தி எவையும் வேண்டாம் – வலி. வடக்கு மக்கள்
சர்வதேச விமான நிலையம், துறைமுக அபிவிருத்தி எவையும் வேண்டாம் எனவும் தமக்கு தமது சொந்த நிலங்களே வேண்டும் எனவும் வலி.வடக்கு மீள் குடியேற்ற புனர்வாழ்வு சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றது. பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசதுறை துறைமுகம் அபிவிருத்தி செய்வதற்காக அதனை அண்டிய பகுதிகளிலுள்ள தனியார் காணிகள் சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு கருத்து தெரிவித்த அவர், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி மற்றும் விஸ்தரிப்பு நடவடிக்கைக்கு என மயிலிட்டி மீன் பிடித்துறை முகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள தனியார் காணிகள் சுவீகரிக்கபடவுள்ளதாகவும், அப்பகுதி மக்களை அங்கே மீள் குடியேற்றம் செய்யாது வேறு பகுதிகளில் மீள் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கபடவுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.
மயிலிட்டி பகுதியில் உள்ள மக்கள் 1983ம் ஆண்டு முதல் அப்பகுதியில் மீன் பிடியில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது. இலங்கையின் மொத்த மீன்பிடியில் 33 சதவீதம் மயிலிட்டியிலையே மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் மயிலிட்டி பகுதியில் விவசாய நடவடிக்கைகளிலும் மக்கள் ஈடுபட்டு இருந்தனர். 1990ம் ஆண்டு மக்கள் அப்பகுதியில் இருந்து முழுமையாக வெளியேறிய பின்னர் இன்னமும் மக்கள் அப்பகுதியில் மீள் குடியேறவில்லை. இந்நிலையில் மயிலிட்டி பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை அப்பகுதியில் மீள் குடியேற்றது வேறு பகுதியில் மீள் குடியேற்றி காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் ஆயின் அப்படியான அபிவிருத்தி எமக்கு தேவையில்லை. மயிலிட்டி பகுதியில் 3 கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த 2000 குடும்பம் நேரடியாக பாதிக்கப்படும். இத்தனை குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலையில் எமக்கு அபிவிருத்தி வேண்டாம்.
அதேபோன்று பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய போவதாக கூறப்படுகின்றது. அதற்காக அப்பகுதியில் உள்ள சுவீகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமாகணத்தில் தூதுவராலயங்கள் எதுவும் இல்லை நாம் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிமாயின் கொழும்புக்கு சென்ற விசா பெற வேண்டும். இவ்வாறன நிலையில் எதற்காக பலாலியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் கடந்த ஆட்சி காலத்தில் மாத்தள விமான நிலையம் அமைக்கப்பட்டது. அந்த விமான நிலையம் தற்போது நெற்களஞ்சியமாக மாற்றப்பட்டு உள்ளது. அதேபோன்றே பலாலியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டால் வெங்காயம் கருவாட்டு களஞ்சியமாகவே பிற்காலத்தில் மாற்றம் அடையும். கடந்த 1983ம் ஆண்டு காலப்பகுதியில் பலாலி விமான நிலையத்திற்கு அருகில் துவிச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு உடனே 42 ரூபாய்க்கு விமான டிக்கெட் எடுத்து கொழும்பு சென்று வந்தார்கள்.
விமான நிலைய எல்லையோடு வீடுகள் தோட்டங்கள் இருந்தன. அதேபோன்று இப்பொழுதும் விமான நிலையத்தை அண்டி மக்களை அவர்களின் காணிகளில் குடியேற்றுங்கள். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்தால் பலாலி, ஊறணி, காங்கேசன்துறை மற்றும் குரும்பசிட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படும். இத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டு எமக்கு சர்வதேச விமான நிலையம் பலாலியில் வேண்டாம். எமது சொந்த நிலங்கள் எமக்கு வேண்டும். அதற்காவே கடந்த ஆட்சி காலத்தில் பல போராட்டங்களை முன்னெடுத்தோம். தற்பொழுது நல்லாட்சி நடைபெறுகின்றது. இந்த அரசாங்கத்துடன் எமது பிரச்சனைகளை பேசி தீர்க்கலாம் என எதிர்பார்க்கின்றோம்.
இந்த ஆட்சி மாற்றத்திற்காக, வலி.வடக்கு பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து வடமராட்சி போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் 50 கிலோ மீற்றர் தூரம் பயணித்து வந்து வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். தற்போது ஆட்சியில் உள்ளவர்களை ஆட்சி பீடத்தில்ஏற்றி உள்ளார்கள் இவற்றை கவனத்தில் கொண்டு இந்த நல்லாட்சி அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்கள் விரைவில் மீள் குடியேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.