தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாதைக்கு குறுக்காக முள்வேலிகள் அமைக்கப்பட்டு நில அபகரிப்பு

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயிலிருந்து கோட்டைக் கேணியூடாக மணலாறு மண்கிண்டி மலைக்குச் செல்லும் பாதைக்கு குறுக்காக முள்வேலிகள் அமைக்கப்பட்டு நில அபகரிப்பு இடம்பெறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இந்த நில அபகரிப்பானது, மத்திய அமைச்சர் ஒருவரின் உறவினர்களுக்கானது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்தை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று உறுதிப்படுத்தினார்.

mullai_road_002

இது பற்றி அவர் தெரிவிக்கையில்,

மணலாறு பகுதியில், ஏற்கனவே குளங்களோடு உள்ள தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்ட நிலையில், தற்போது மகாவலி L வலயம் என்கிற போர்வையில் வர்த்தக நோக்கத்துடன் தமிழர்கள் காணிகள் அபகரிக்கபட்டுள்ளன.

தென்னை, மாமர செய்கைக்கு என்று 33 சிங்களவர்களுக்கு தலா 25 ஏக்கர் வீதம் மொத்தமாக 325 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டு வேலிகள் இடப்பட்டுள்ளன. இதற்காக தலா 3 லட்ச ரூபா முற்பணம் மகாவலி அதிகார சபையால் பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. இக்காணிகள் உப உணவுப் பயிர்ச் செய்கைக்காக ஏற்கனவே தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளாகும். அதனை அபகரித்து தற்போது சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மண்கிண்டி மலையிலிருந்து கோட்டைக் கேணியூடாக கொக்குத்தொடுவாய்ச் சந்திக்கு செல்லும் பாதையின் பகுதியும் உள்வாங்கப்பட்டிருக்கிறது. அரச அமைச்சர் ஒருவரின் உறவினர்களுக்காக இப்பகுதி நிலங்கள் வழங்கப்பட்டிருப்பதாக மக்களின் கருத்துக்களில் இருந்து அறியமுடிகிறது என அவர் தெரிவித்தார்.

Comments
Loading...