தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்!

201701180638598693_students-youngsters-Protest-continued-through-night_SECVPF-450x256ஜல்லிக்கட்டு நடக்கும் வரை போராட்டம் தொடரும் என அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பின்பு போராட்டகுழு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அவசர சட்டம் கொண்டு வர ஜனாதிபதி, பிரதமருக்கு அழுத்தம் தரப்படும் எனவும் இதுகுறித்து முதல்வர் இன்று(ஜன.,18) அறிக்கை வெளியிடுவார் எனவும் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த கோரி சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் உட்பட பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து மாநில மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டகாரர்களின் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தை நடத்த அவரது இல்லத்திற்கு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளாக 10 பேர் கொண்டு குழுவை அழைத்து சென்றனர். அவர்களை அமைச்சர்கள் ஜெயகுமார் மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் மாஃபா பாண்டியராஜன் பேசியதாவது: போராட்டக் குழு பிரதிநிதிகளின் கோரிக்கைகளை முதல்வரிடம் தொலைபேசியில் தெரிவித்தோம். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்போம்.

அதிமுக கட்சி எம்.பி.,க்கள் பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதியை சந்தித்து அவரச சட்டம் கொண்டு வர வலியுறுத்துவார்கள். முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்துமுதல்வர் 24 மணி நேரத்தில் அறிக்கையை வெளியிடுவார். இளைஞர்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.

போராட்ட குழு பிரதிநிதிகள் கூறியதாவது: “ஜல்லிக்கட்டை நடத்திய ஆக வேண்டும். காளையை காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகளிலிருந்து நீக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழர்களின் பாரம்பரியம் குறித்து எதுவும் தெரியாத வெளிநாட்டு அமைப்பான பீட்டா அமைப்பை குறைந்தபட்சமாக தமிழகத்திலாவது தடை செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டு விசயத்தில் முதல்வர் ஆதரவு தர வேண்டும், அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் எந்தவித வழக்கு பதிவும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளோம். அமைச்சர்கள் முதல்வரிடம் பேசினார்கள். முதல்வர் இன்று அறிக்கை வெளியிடுவார். அந்த அறிக்கையை பொறுத்து அடுத்தக்கட்ட முடிவை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தெரிவிப்பார்கள், ஜல்லிகட்டு நடக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.” என்றார்கள்.

தொடர்ந்து போராட்ட குழு பிரதிநிதிகள் போராட்டகாரர்களிடம் சென்று இது குறித்து தெரிவித்தபோது முதல்வர் பன்னீர் செல்வம் அறிக்கை அளித்தால் மட்டும் போதாது போராட்டகளத்திற்கு நேரில் வந்து ஜல்லிகட்டு நிச்சயம் நடக்கும் என்ற உறுதியை அளிக்க வேண்டும். என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் போராட்டகாரர்களை கலைந்து செல்ல வலியுறத்தியும் போராட்டகாரர்கள் கலைய மறுத்து விட்டனர். தொடர்நது போலீசாரும் அமைதியான போராட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு தொடரும் என தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...