Designed by Iniyas LTD
ஸ்டாலின் நடத்தையால் கருணாநிதி அதிருப்தி
சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் நடந்துகொள்ளும் விதம் திமுக தலைவர் கருணாநிதிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சட்டசபையில் 98 பேர் ஆளுங்கட்சிக்கு எதிராக உள்ள நிலையில் ஆளுங்கட்சி தரப்பில் சபையை நடத்துவதில் சிரமம் இருக்க வேண்டும். ஓரளவுக்கு தடுமாற்றம் இருந்தாலும், திமுக தரப்பில் வலுவான வாதங்கள் சபையில் வைக்கப்படாததால் அவர்கள் எளிதாக சமாளிக்கின்றனர்.
எதிர் தரப்பில் முக்கியமான பிரச்சனைகள் குறித்து பேசும்போது, ஆளுங்கட்சித் தரப்பில் குறுக்கீடுகள் அதிகமாக உள்ளன. அதற்காக, திமுக தரப்பில் வெளிநடப்பு செய்யப்படுகிறது. அப்படி செய்வதில் பிரயோஜனமில்லை, இதனை மக்களும் ரசிக்க மாட்டார்கள். அதேபோல, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மானிய கோரிக்கை விவாதத்துக்காக குறிப்பிட்ட திமுக எம்எல்ஏக்களை மட்டும் தயாராக வர சொல்கின்றனர். ஒவ்வொரு துறையிலும் உள்ள குறைபாடுகளை விரல் நுனியில் வைத்திருக்கும் நிபுணர்கள் பலர் உள்ளனர்.
அவர்களிடம் கேட்டால், அனைத்து விபரங்களும் கிடைத்து விடும். அந்த விபரங்களை கொடுத்து பேச வைத்தாலே அரசு தரப்பில் தடுமாறுவர். அதை விடுத்து அரைகுறையாக பேசுகின்றனர். சபையில், என்ன தடை வந்தாலும் மீறி பேசுவதில் தான் எதிர்க்கட்சி தலைவரின் சாமர்த்தியம் உள்ளது. அதை ஸ்டாலின் சரிவர செய்யவில்லை. ஜெயலலிதாவை தொடர்ந்து சபைக்கு வரவழைப்பதில், ஸ்டாலின் தவறி விட்டார்.
இப்படி பல விடயங்களில், ஸ்டாலின் செயல்பாடுகள் இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என கருணாநிதி கருதுகிறார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.